தமிழ்க் கடவுள் ஆலயத்தின் தலைமகனுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி

நல்லூர் கந்தன் ஆலயத்தின் தலமை நிர்வாகி குமாரதாஸ மாப்பாண முதலியார் இயற்கை எய்திய செய்தி உலகம் வாழ் தமிழ் மக்களுக்கு கவலை தரும் செய்தி. அவரது வாழ்வும் அவ் வாழ்வில் அவர் கடைப்பிடித்த நெறிமுறையும் யாழ்ப்பாண தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது தனித்தன்மை மிக்க அடையாளமாகத் திகழும். தமிழர்கள் தங்கள் தாய்ப்பூமியின் தலைநகராக யாழ்ப்பாணத்தையும் அதன் இதயமாக நல்லூரையும் கொண்டாடவிளையும் மற்றும் ஆவணப்படுத்தும் எண்ணங்களுக்கு சொல்லிலும் செயல் பெரிது என பல செயற்கரிய செயல்களை ஆற்றியவர் அமரர் அவர்கள்.
கட்டக்கலை மரபுகளாலும் வழிபாட்டு முறைகளின் தனித்துவங்களினாலும் நல்லூர் எங்கள் தமிழ்க் கடவுள் முருகனின் ஆலயம் ஈழத் தமிழர்களின் அடையாளம் என உலகத் தமிழர்கள் பெருமைகொள்ள உரிய வழிவகைகளைச் செய்து வைத்தவர் மாப்பாணர் அவர்கள். நேரம் தவறாமை, நேர்த்தியான திட்டமிடல், ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனும் சிந்தை, தோற்றத்தில் எளிமை, தன்முனைப்பற்ற தலமைத்துவம் என பன்முக ஆளுமைகளைக் கொண்ட தலமைத்துவ உதாரணமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய காலப்பாடம் ஒன்றை நாம் இன்று இழந்துள்ளோம்.
கரையற்ற வெள்ளை வேட்டிக் கலாசாரத்தை நம் தமிழர்களிடம் புகுத்தியவர் அக் கறையற்ற மனிதன் என்பது கண்கூடு நாம் கண்ட நிதர்சன உண்மை. தலைமுறை இடைவெளி எனும் முகாமைத்துவ சிக்கல் அற்று இயல்பாக நேர்த்தியாக பொறுப்புக்களை அனுபவங்களின் வழி தலைமுறைக் கையளிப்புச் செய்த அவரது ஆற்றல் என்றும் சிலாகித்து நினைக்கவல்லது. மூன்று தலைமுறைகள் ஒன்றாக நின்று இறைகாரியம் ஆற்றிய பொழுதுகளை காணும்போது மிக்க நெகிழ்ச்சியாகவிருக்கும். இன்று அத் தலைமுறையின் முதல்பெருமகனை இழந்துள்ளோம்.
தன் முடிவுகளை எவருக்காகவும் விட்டுக்கொடுக்காத தலமைத்துவ ஆற்றல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவ் ஆற்றல் வாய்த்த தலைவரின் பின்பற்றுனர்களாக இருக்கும் வாய்ப்பும் இலகுவில் எல்லோருக்கும் வாய்;ப்பதில்லை. இவ்விரண்டையும் யதார்த்தமாக்கிய வாழ்வியல் நல்லைக் கந்தன் ஆலயத்தில் நிகழ்ந்தேறியது. முருகனின் கட்டளைப்படி காரியங்கள் ஆற்றுகின்றேன் எனும் ஒற்றை முடிவுடன் பல செயல்களைச் செய்த பெருமகன் குமாரதாஸ மாப்பாண முதலியார்.
தூரநோக்குச் சிந்தனையுடன் அவர் நல்லூர் ஆலயத்தை மையப்படுத்தி ஆற்றிய பல காரியங்கள் ஈழத் தமிழர்கள் வரலாற்றின் அடையாளங்களாக என்றும் பேசப்படும். தமிழர்களின் தனித்துவ அடையாளமாக முன்னைய இராசதானி நல்லூரை மாற்றிய பெருமனின் பெருவாழ்வை வியந்து அவரது பிரிவால் துயருற்று உலகம் வாழ் யாழ்ப்பாணத் தமிழர்கள் சார்பில் எமது அஞ்சலிகளைத் தெரிவிக்கின்றோம்.

Bookmark the permalink.

Leave a Reply