யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கடந்த வியாழக்கிழமை 13.03.2024 பிற்பகல் 4.30 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக தமிழ் சிறப்புக்கலை மாணவன் யோ. நிவேதன் வரவேற்புரை ஆற்றினார். யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் இராசையா தனராஜின் திருக்குறள் நடனம் , பண்டத்தரிப்பு பெண்கள் உயர் கல்லூரித் தமிழாசிரியர் ந. குகபரனின் திருக்குறளில் பண்புற மொழிதல் என்ற தலைப்பில் அமைந்த சிறப்புரை, வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. விஜயசுந்தரம் தலைமையில் தெ.ஹர்சன், ர.தர்மினி, ஜீவா சஜீவன், இ.கார்த்தியாயினி, த. கருணாகரன், செல்வதிஅம்மா ஆகியோர் பங்குபற்றிய இன்றைய தமிழர் செல்நெறி வள்ளுவர் வகுத்த பாதையில் பயணிக்கின்றதா என்ற பொருளில் அமைந்த பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றன.
முன்னதாக யாழ் முன்னணிப் பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களிடையே அவர்களது பாடத்திட்டத்திற்கு உட்பட்ட வகையில் திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அணிக்கு ஐவர் பங்கேற்றனர். யாழ். இந்து மகளிர் கல்லூரி அணி முதலிடத்தையும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. போட்டியை சங்கச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச. லலீசன், ஆட்சிக் குழு உறுப்பினர் யோ. நிவேதன் ஆகியோர் நெறிப்படுத்தினர். தமிழ்ச்சங்சப் பொருளாளர் மருத்துவ சேவை உத்தியோகத்தர் லோ. துஷிகரன் நன்றியுரை ஆற்றினார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதுநிலை விரிவுரையாளர் கு. பாலசண்முகன் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.
நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் உரைவகுத்த திருக்குறன் உரை நூல் இலவசமாக வழங்கப்பட்டது. இதே வேளை திருக்குறளுக்கு உரை வகுத்த முதல் தமிழ் பெண் உரையாசிரியர் என்ற பெருமையைப் பெற்ற முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் திருமதி சஜிதா வேல்நம்பியால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.