தமிழர் இசைவடிவத்தின் காவலரான கணபதிப்பிள்ளை ஐயா காலத்தால் மறக்கமுடியாத கலைப் பொக்கிசம்

ஈழத்தமிழர்களின் இசைப்பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க விற்பன்னராகத் திகழ்ந்த சங்கீதபூசணம் கணபதிப்பிள்ளை ஐயா காலமான செய்தி கவலைதரும் விடயமாகவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழர்களின் கலைப்பாரம்பரியத்தில் குறிப்பாக இசைப்பாரம்பரியத்தில் கணபதிப்பிள்ளை ஐயாவுக்கு காத்திரமான இடமுண்டு. இசைத்துறைக்காக அத்துறை சார்ந்த கலைஞராகவும் கல்வி நிர்வாகியாகவும் அவர் ஆற்றிய பணிகள் அற்புதமானவை. இன்று எமது மண்ணில் இசைத்துறையைப் போதிக்கும் இசையாசிரியர்கள் பலர் அவருக்கு ஏதொவொரு வகையில் நன்றிக்கடன் பட்டவர்களாகவேயிருப்பார்கள்.
வட இலங்கை சங்கீத சபையின் பணிகளில் வினைத்திறனுடன் பணியாற்றிய அவர் இசைத்துறை சார்ந்த பல கலைஞர்களை உருவாக்கினார். அத்துடன் இசைத்துறையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எனத் தான் வகித்த உயர்பதவியின் வழி இசைத்துறை ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்திக்காக பல செயற்றிட்டங்களை வகுத்துச் செயற்படுத்தியவர் அவர். ஒர் அரங்க இசைக்கலைஞர் அரங்கை ஆளுகை செய்வதற்கு எத்தகைய பண்புகளையும் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் மூலம் வாழந்து காட்டியவர் கணபதிப்பிள்ளை ஐயா. நீண்ட தொடர்ச்சித்தன்மைமிக்க மாணவப் பாரம்பரியத்தை தன் இசைத்துறையில் உருவாக்கியிருப்பவர் கணபதிப்பிள்ளை ஐயா.
கர்நாடக சங்கீதத்துறையின் உச்ச நிலை விற்பன்னராகத் திகழ்ந்த அவர் அதனூடாக தமிழிசையையும் வளர்க்கும் திடசங்கற்பத்தையும் கொண்டிருந்தார். இசைத்துறை அரங்குகளில் தமிழிசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்டார். இன்று பலரும் தமிழிசையின் மரபுத் தொடர்ச்சி குறித்துப் பேசும் போது அதனைச் செயலில் காண்பித்த செயற்றிறன்மிக்கவராக கணபதிப்பிள்ளை ஐயா திகழ்ந்தார்.
இவரது மறைவு இசைத்துறைக்கு மட்டுமன்றி ஈழத்து கலையுலகுக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு. அமரரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம்.

Bookmark the permalink.

Leave a Reply