சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் நாவலர் நினைவரங்கம் -2021

சைவத்துக்கும், தமிழுக்கும் அளப்பரிய பணிகளாற்றியவரும், ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படுபவருமான சைவத்தின் காவலர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை நன்னாளான நேற்றுச் சனிக்கிழமை(27.11.2021) முற்பகல் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ‘நாவலர் நினைவரங்கம்’ அவர் வாழ்ந்த புனித மண்ணான யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.நாவலர் கலாசார மண்டபத்தின் முன்பாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்ற வழிபாட்டில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உப தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கலந்து கொண்டு ஆறுமுகநாவலருக்கு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவரும், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வருமான செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியருமான கலாநிதி அ.சண்முகதாஸ், பேராசிரியை கலாநிதி.திருமதி.மனோன்மணி சண்முகதாஸ் உள்ளிட்டோர் மங்கல விளக்கேற்றி வைத்தனர்.

தொடர்ந்து கடவுள் வணக்கமும் நாவலர் வாழ்த்தும் பண்ணுடன் ஓதப்பட்டது. வரவேற்புரையைத் தொடர்ந்து தொடக்கவுரையை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆற்றினார். தொடர்ந்து தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தினை நிலைநாட்டி கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை விருதினை வியாழக்கிழமை(25) பெற்றிருந்தது. இதனைப் பாராட்டிக் கெளரவிக்கும் முகமாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி திரு.ஆறுதிருமுருகன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆகியோரால் சிறப்பாக கெளரவிக்கப்பட்டார்.

யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் வாழ்த்துரையையும், செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையுரையையும் நிகழ்த்தினர்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஆசிரியரும், இந்துசமய ஆன்மீகப் பிரசாரகருமான செல்வி.கனகதுர்க்கா கனகரத்தினம் “நாவலர் வழி” எனும் தலைப்பில் நினைவுப் பேருரை வழங்கினார்.

சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த உயர்தர மாணவன் சந்திரகுமார் அமலசாம் “நடையில் நின்றுயர் நாயகன் நாவலன்” எனும் தலைப்பிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவன் ஜெயபாலன் தவேதன் “எழுந்த கொழுங்கலல்” எனும் தலைப்பிலும் உரைகள் நிகழ்த்தினர்.மேற்படி நிகழ்வில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவரும், யாழ்.மாநகரசபை உறுப்பினருமான சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி ம.பாலகைலாசநாத சர்மா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறையின் தலைவர் கலாநிதி ச.முகுந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்துறை விரிவுரையாளரும், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளருமான இ.சர்வேஸ்வரா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் செல்வரட்ணம், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினருமான கு.பாலஷண்முகன், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் ச.கருணாகரன், யாழ்.மாநகரசபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள், சமய, தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் “சைவமும் தமிழும் எனது இரு கண்கள்” எனப் பொறிக்கப்பட்ட ஆறுமுகநாவலரின் அழகிய திருவுருவப்படம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினரால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

நிகழ்வின் வீடீயோப் பதிவைக் காண…

https://fb.watch/9zRIoT0Vzs/

Bookmark the permalink.

Leave a Reply