செங்கை ஆழியானின் மறைவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு

Senkai Aliyanசாகித்திய ரத்னா செங்கை ஆழியான், இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் ஓர் அத்தியாயமாகக் கொள்ளத்தக்கவர். யாழ். வண்ணார்பண்ணையில் உள்ள கலட்டியில் 1941 சனவரி 25இல் பிறந்தவர். தந்தை கந்தையா. வணிக முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர்;. தாய் அன்னம்மா. குடும்பத்தில் இவர் எட்டாவது பிள்ளை.. பாடசாலைக்கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் புவியியல் துறைசார்ந்த  முதற்பட்டக் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1984 இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் 1991 இல் கலாநிதிப் பட்டத்தையும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்டார்.
இலக்கிய உலகு, கல்வி உலகு, நிர்வாக உலகு என இவரது ஆளுமை விரிவாக்கத்தை வகுத்து ஆராய முடியும். 50 நாவல்கள், 185 சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாடநூல்கள் எனப் படைத்த பெருமக்குரியவர்.  கடந்த 2016 சனவரி ; 25 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாரீர் என்ற பெயரில் விவரண நூல் ஒன்றைத் தனது 75 ஆவது பிறந்த நாள் நினைவாக வெளியிட்டிருந்தார்.
இலங்கைத் தமிழ் எழுத்துலகு பற்றி அறிய விரும்புகின்றவர்கள் செங்கை ஆழியானைத் தரிசித்த பின்பே ஏனையவர்களைத் தரிசிக்கும் ஒரு பொது ஒழுங்கினைக் கொண்டிருந்தனர். எழுத்தே வாழ்க்கை என வாழ்ந்த செங்கை ஆழியானின் பிரிவால் துயருறும் உள்ளங்களுக்கு எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
Bookmark the permalink.

Leave a Reply